புதுடெல்லி: ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் வெளியிட்ட கடன் பத்திரங்களில் ரூ.2,500 கோடி முதலீடு செய்தது. இந்த கடன் பத்திரங்கள் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் முதிர்ச்சியடைய வேண்டியவை. ஆனால், ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவனம் பணத்தை முறைகேடான பரிவர்த்தனைகள் மூலம் வேறு இடங்களுக்கு திருப்பியதால், முதிர்வு காலத்தில் பணத்தைத் திரும்பச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் இபிஎப்ஓவுக்கு மொத்தமாக ரூ.1,816.22 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐயிடம் புகார் தரப்பட்டது. இதுதொடர்பாக, அனில் அம்பானி, அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் பிற நபர்கள் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல், கிரிமினல் நம்பிக்கை துரோகம் மற்றும் அதிகார முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
