சென்னை: காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு திறந்துவிடக்கோரி திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் திமுக விவசாயிகள் அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அவசர மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட அவசர உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கடந்த 2018 பிப்ரவரி 16ம் ேததி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும். கடந்த மாதம் 28ம் தேதி காவிரி நீர் ஒழுங்குமுறை குழு வழங்கியதும், ஜூலை 30ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்த உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக முழுமையாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை பிலிகுண்டுலுவில் திறந்துவிட வேண்டும். அதற்கு முந்தைய அதாவது ஜூலை 29ம் தேதியிலிருந்து பற்றாக்குறையை ஈடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
கடந்த மாதம் 26ம் தேதி நிலவரப்படி விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 9.46 டி.எம்.சி. நீர்பற்றாக்குறையை ஈடு செய்யும் வகையில் 15 நாட்களுக்கு தினமும் சுமார் 7,000 கியூசெக்ஸ் தண்ணீர் பிலிகுண்டுலுவில் கிடைக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரையும், பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரின் அளவையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தினசரி கண்காணித்து, அதன் அமலாக்க நிலையை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
வழக்கின் உண்மை நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, நீதியை நிலைநாட்டுவதற்கு தேவையான உரிய உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கர்நாடக அரசு, காவிரி நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ அமைப்புகளின் கட்டாய உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவிரி நீரை திறந்துவிட மறுத்துள்ளதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், உச்ச நீதிமன்றத்தின் 2018ம் ஆண்டின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தவும், உடனடியாக தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேல்முறையீட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளுமாறும் திமுக மனுவில் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
