பெங்களூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் பந்த் நடத்த முடிவெடுத்து உள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்தப்படும் என்று கன்னட கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் பெங்களூருவுக்கு விஜய் வரும்போது விமான நிலையம் முற்றுகையிடப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று பல்வேறு கன்னட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் வாட்டாள் நாகராஜ் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு வாட்டாள் நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாட்டாள் நாகராஜ் கூறியதாவது; இப்போது நிலவும் நிலை நமக்கு வந்திருக்க கூடாது. தமிழ்நாட்டுடன் யுத்தம் நடத்த வேண்டும் என்ற நோக்கம் நமக்கு கிடையாது. ஆனால் அவர்கள் தமிழ்நாடு முதலில் இருந்தே நமக்கு தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.
எந்த காரணம் கொண்டும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க கூடாது. ஏனென்றால் மாநிலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் வறட்சி நிலவுகிறது. இப்படியான சூழலில் 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீரை தமிழகத்துக்கு திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடகா முழுவதும் பந்த் கடைப்பிடிக்கப்படும்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கன்னடர்களிடம் கையெடுத்து கேட்டு கொள்கிறேன். அனைவரும் இந்த பந்த்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம். நான் எல்லோரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன். மொத்த கர்நாடகத்திலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி பந்த். மொத்த விவசாய அமைப்பினரும் இந்த பந்த் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கர்நாடகா வந்து முதல்வர் டிகே சிவக்குமாரை விஜய் சந்தித்து பேசுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் சொல்லிவிட்டது என்று தமிழகத்துக்கு தண்ணீர் கேட்டு வந்தால், விஜய் வரும்போது விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
