சென்னை: பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய அத்தியாவசிய உணவுத்தேவைக்கு அடிப்படையான அரிசி அண்மைக்காலமாக கிலோ ஒன்றுக்கு 10ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கப்படுவது கடந்த ஆண்டு விலை உயர்வோடு ஒப்பீடு செய்வதில் தெரியவருகிறது. போதிய மழையின்மை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு காவிரியின் நீர் வரத்து குறைந்துபோனதும் ஒரு காரணமாகும். வளைகுடா போரின் காரணமாக அரிசி அதிக அளவில் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுவது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
நிலைமை எவ்வாராகினும், பாதிக்கப்படுவது அரிசி நுகர்வோரான பொதுமக்கள் தான். மத்திய மாநில அரசுகள், நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுத்து, அரிசி இருப்பு மற்றும் சர்க்கரை இருப்பை கண்காணித்து பொதுமக்கள் விநியோகத்தில் பாதிப்பு ஏதுமின்றி விநியோக கட்டமைப்பை விரைந்து உறுதி செய்திட அனைத்து நடவடிக்கைகளையும், எடுத்திட வேண்டும். குறிப்பாக அரிசி இருப்பு, சர்க்கரை இருப்பு போன்றவற்றை அரசு ஆய்வு செய்து, பதுக்கல் ஏதுமின்றி இயல்பான விநியோகம் நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு குடிமைப்பொருள் விநியோகத்துறை அதிகாரிகளின் மூலம் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும். கறிக்கோழி கிடைப்பதில் தட்டுபாட்டை நிவர்த்தி செய்திட, கறிக்கோழிக்கான தீவன உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவித்திருப்பது கூர்ந்து கவனிக்கவேண்டியது அவசியமாகும்.
அசைவ உணவகங்கள் மற்றும் அசைவ உணவு பயன்பாட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்படுவதை தவிர்த்திட அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
