சென்னை: காவிரி பிரச்னை உச்சக்கட்ட நிலையில் இருக்கும் நேரத்தில் சென்னை வரும் ராகுல்காந்தி மற்றும் முதல்வர் விஜய் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராகுலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக முதல்வர் பெங்களூரில் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழக அரசு சார்பாக உறுதியாக அறிவிக்காத நிலையில், கர்நாடக முதல்வர் சிவகுமார் அளித்துள்ள பேட்டியில், விஜய்யின் வருகையை உறுதி செய்து இருக்கிறார். மேலும் விஜய்யை காவிரி நீர் பாசன பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வறட்சி நிலவரத்தை காண்பிக்க உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே முதல்வர் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது என்று தமிழகத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டு மொத்த குரலாக கோரிக்கை விடுத்துள்ளன.
பேச்சு வார்த்தைகள் முடிந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துவிட்ட நிலையில், இப்போது பேச்சுவார்த்தையை தொடங்குவது நமக்குத்தான் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினை தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றமே சொல்வதற்கு இது வழிவகுக்கும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுக்கின்றன. மேகதாது அணை கட்டுவதற்கு முன்பே தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசு, அணை கட்டினால் குடிக்க கூட தண்ணீர் கொடுக்காது என்பதால் தமிழக முதல்வர் கர்நாடகா போக கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் விஜயை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே நாளை ராகுல்காந்தி சென்னை வருகிறார். காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர் முதல்வர் விஜயை நேரில் சந்திக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. அவ்வாறு சந்திக்கும் பட்சத்தில் காவிரி நீர் விவகாரம் குறித்து கண்டிப்பாக பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.காவிரி நீர் விவகாரத்தில் ராகுல்காந்தியின் நிலைபாடு என்ன? அவர் தமிழக உரிமைகளுக்காக பரிந்து பேசுவாரா? என்ற கேள்வியை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் எழுப்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யை சந்திக்கும்பட்சத்தில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டிய நிலை ஏற்படும். காவிரி நீர் தொடர்பாக பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதால் ராகுல்காந்தி- முதல்வர் விஜய் சந்திப்பு இருக்க வாய்ப்பில்ைல என்றே காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர் பிரச்னை, மேகதாது பிரச்னை என கர்நாடக அரசுடன் தமிழகம் மோதல் போக்கு உச்சத்தில் இருக்கும் நிலையில், இருவரது சந்திப்பு என்பது நடக்க வாய்ப்பில்லை. இதை தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு உள்ளது. 2028ம் ஆண்டு அம்மாநிலத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக காவிரியில் கர்நாடகத்தின் பக்கம் ராகுல்காந்தி நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் சந்திப்பு நடந்தால், காவிரியில் தமிழகத்துக்கு ஆதரவாக இருவரும் ஏன் பேசவில்லை என்ற கேள்வி எழும். இதனால்தான் இருவரும் சந்திப்பை ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.அதேநேரத்தில் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவு தெரிவிக்காத ராகுலை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
