×

சாலையில் கழிவுநீர் தேக்கம்: அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

 

மாதவரம், ஜூலை 31: மாதவரம் அருகே பெரிய சேக்காடு பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கியதை சரிசெய்யாத குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 27வது வார்டு, பெரிய சேக்காடு, காமராஜர் சாலை குறுக்கு தெரு சாலையை, சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கீழ்நிலை தொட்டியில் கழிவு நீரைத் தேக்கி லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பிய பிறகு, அதை சுத்தம் செய்யாததால் அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி அடிக்கடி தெருவில் ஓடுவதால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுவதோடு, குழந்தைகள் முதியோருக்கு தொற்று நோய் பாதிப்பு உள்ளது. இதுகுறித்து மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி இரவு இங்குள்ள ஒரு குடியிருப்பில் இருந்து கழிவுநீர் தெருவில் ஓடியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து காமராஜ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் நேற்று முன்தினம் காலையும் தொடர்ந்து கழிவுநீர் வெளியேறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பு அருகே தெருவில் ஒன்று கூடி குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். தகவலறிந்த குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தனர். அப்போது 5 வருட கால பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு எடுக்காமல் குடியிருப்பு வாசிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனக்கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கழிவுநீர் வெளியே வராமல் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Madhavaram ,Drinking Water Supply Board ,Periya Sekkadu ,Chennai Corporation ,Madhavaram Zone ,27th Ward ,
× RELATED நகை, துணிக்கடைகளில் நெரிசலை...