இந்தியாவில் டெங்கு புதிய பரிமாணம்.!! பல வகை வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவுவதால் அதிர்ச்சி

இந்தியாவில் டெங்கு வைரஸ் தற்போது சாதாரண காய்ச்சலாக மட்டும் இல்லை; மிக ஆபத்தான புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை, 25 மாநிலங்களில் டெங்கு பாதிப்புக்கு ஆளானவர்களிடமிருந்து 6,889 மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு வைரஸ் வகை–2 (DENV-2) தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், நாட்டின் எட்டு மாநிலங்களில், DENV-1 முதல் DENV-4 வரை நான்கு வகையான டெங்கு வைரஸ்களும் ஒரே நேரத்தில் பரவி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 15 மாநிலங்களில் மூன்று வகையான டெங்கு வைரஸ்கள் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாகும்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 14 பேரில் ஒருவருக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட டெங்கு வைரஸ் வகைகள் ஒரே நேரத்தில் தொற்றை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறு பல வகையான டெங்கு வைரஸ்கள் ஒரே நேரத்தில் பாதிக்கும்போது, இரத்தத் தட்டணுக்களின் (Platelets) எண்ணிக்கை ஆபத்தான அளவுக்கு குறைவதுடன், கடுமையான இரத்தப்போக்கு மற்றும் தீவிர உடல் சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

டெங்கு தடுப்பூசி இன்னும் இந்தியாவின் அனைவருக்குமான தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், வெளிநாடுகளில் உருவாக்கப்பட்ட டெங்கு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து, டெங்கு தடுப்பூசியையும் பொது சுகாதாரத் திட்டங்களில் உடனடியாக இணைக்க வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Related Stories: