×

நிகர்நிலை பல்கலை. அந்தஸ்து வழங்குவதற்கான யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை. வழக்கு: ஒன்றிய அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசும், பல்கலைக்கழக மானிய குழுவும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 2023ம் ஆண்டு விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதில், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரும் கல்வி நிறுவனங்கள், எந்த பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளதோ, அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சேபம் இல்லா சான்று பெறவேண்டும். 60 நாட்களுக்குள் ஆட்சேபம் இல்லா சான்றை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேபம் இல்லை எனக் கருதி நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரி கல்வி நிறுவனம் அளித்த விண்ணப்பித்தை நடைமுறைபடுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், யுஜிசி விதிகள் மாநில அரசின் கவுன்சிலிங் நடைமுறை, இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த விதிகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு ஒன்றிய அரசுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : Net University ,UGC ,Dr. ,M. G. R. University ,iCourt ,EU government ,Chennai ,Tamil Nadu ,M. G. R. ,Chennai High Court ,Union Government ,University Grants Committee ,University ,
× RELATED குறு, சிறு நிறுவனங்களில் டிஜிட்டல்...