×

மெட்ரோ ரயில் பணிகளை முதல்வர் விஜய் ஆய்வு பூந்தமல்லி-வடபழனி வழித்தட சேவை விரைவில் தொடங்கும்: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள், 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அரசினர் தோட்டம், நந்தனம், கிண்டி, கத்திப்பாரா, போரூர் மற்றும் பூந்தமல்லி வழித்தடங்களில் நடைபெறும் பணிகளை முதல்வர் விஜய் நேற்று ஆய்வு செய்தார். அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில்இருந்து பொதுமக்களுடன் இணைந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் வரை முதல்வர் பயணம் செய்தார்.

நந்தனம் மெட்ரோ நிலையத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் முதல்வரை வரவேற்று, நிலையத்தின் செயல்பாடுகள், கட்டுமான முன்னேற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் 2ம் கட்ட திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து கிண்டி மற்றும் கத்திப்பாரா பகுதிகளில் நடைபெற்று வரும் உயர்மட்ட மெட்ரோ பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சுமார் 101 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ பாலத்தின் கட்டுமான முன்னேற்றத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் போரூர் மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரை இயக்கப்படவுள்ள ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது ரயிலின் தானியங்கி முறை, சிக்னல் தொழில்நுட்பம், பாதுகாப்பு அமைப்புகள், நிலைய வசதிகள் மற்றும் பயணிகள் சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். போரூர் – பூந்தமல்லி வழித்தடம் சென்னை மெட்ரோ 2ம் கட்டத் திட்டத்தின் முக்கிய பகுதியாகும். இந்த வழித்தடத்தில் அதிநவீன தானியங்கி இயக்க வசதியுடன் மெட்ரோ சேவையை அறிமுகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம், இந்த மாதத்திலேயே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வழித்தடத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் முன்னேற்றம் மற்றும் சோதனை ஓட்டங்களை ஆய்வு செய்துள்ளார். இந்த நிலையில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chief Minister ,Vijay ,Poonamalli ,Vadapalani ,Chennai ,Nandanam ,Guindy ,Kathipara ,Porur ,Government… ,
× RELATED பழநி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில்...