பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிக்கு தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 3 பேரில் ஒருவரை நியமிக்க அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளுக்கு தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 3 பேரில் ஒருவரை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமான வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் முடிவெடுக்கும் வரை, எந்த நியமனங்களும் மேற்கொள்ளப்படாது என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்நிலையில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கிடையில், தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பதவிகளை நிரப்ப உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் அதிகார குழுவை நியமிக்க கோரி செங்கல்பட்டை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரு வழக்குகளும், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, துணைவேந்தர்களை நியமிக்க கோரிய மனுதாரர் தரப்பில், மாநிலத்தில் மொத்தம் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பல்கலைக்கழக பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த உத்தரவாதம் காரணமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் முடங்கியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள 3 பேரில் ஒருவரை தேர்வு செய்ய தமிழக அரசை அனுமதிக்க வேண்டும்.

துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த சட்டம் இன்னும் அமலில் உள்ளதாகவே கருத வேண்டும். அந்த சட்டத்தின் அடிப்படையில் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தனர்.

Related Stories: