தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது, என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை திமுக போராடி பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை தவெக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் வாய்பொத்தி நின்றுள்ளனர். தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?, மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்?, மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?,

நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன?, அகில இந்திய கவுன்சலிங்கின் 2ம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநில கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?. தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?.

29.5.2026 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?. இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர் சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர் பிரச்னை இது. தவெக அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் அளித்தாக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் சுய கணக்கெடுப்புப் பணி தொடங்கி உள்ளது. பொதுமக்கள் se.census.gov.in இணையதளம் மூலம் ஜூலை 31 வரை சுய விவரங்களை பதிவு செய்யலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: “#Census2027-ல் பங்கெடுத்து விவரங்களை வழங்கினேன். நீங்களும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: