×

பொய்த்துபோன தென்மேற்கு பருவமழை அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடிநீர்

*கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு

புதுக்கோட்டை : புதுக்கோட்டைமாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை இல்லாததால் நிலத்தடி நீர் வற்றிவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. விவசாயத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க மன்னர் காலத்தில் ஏரி, குளங்கள் வெட்டப்பட்டது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. நல்ல மழைபெய்யும்போது ஏரியில் நீர் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனை பயன்படுத்தி ஏரி, குளங்கள் இல்லாத பகுதிகளில் போர்வெல் அமைத்து குடிநீர், விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, கோடை மழை குறைந்துவிட்டது. இதனால் படிப்படியாக ஏரி, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை இதுவரை பெய்யவில்லை.

இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர் படிப்படியாக குறைந்து தற்போது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் கிணறுகள், போர்வெல்கள் என அனைத்தும் தற்போது ஏரி, குளங்கள் வறண்டு வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 450க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. கிராம பஞ்சாயத்துகள் சார்பில் ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் குடி தண்ணீர் இலவசமாக செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக கிராமங்களில் தண்ணீர் ஓட்டம் இருக்கும் இடத்தில் போர் வெல் அமைத்து மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறைந்தது ஒரு பஞ்சாயத்திற்கு 8 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் இருக்கும்.

பல இடங்களில் போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போர் வெல் அமைக்கும்போது சுமார் 500 அடி ஆழத்தில் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். அதன்படி போர்வெல் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொடர் வறட்சியால் நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் பல போர்வெல்களில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் புதிதாக போர்வெல் அமைக்கவேண்டுமென்றால் 600 முதல் 800 அடி வரை போர்வெல் அமைத்தால்தான் தண்ணீர் வரும். இதுவும் வரும் ஆண்டுகளில் மழையில்லை என்றால் இந்த போர்வெல்களும் வறண்டு போகும் அபாயத்தில் உள்ளது. வறட்சி, நிலத்தடிநீர் அதள பாதாளத்திற்கு செல்வதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக புதுக்கோட்டை மாநகராட்சி, அறந்தாங்கி நகராட்சி மற்றும் கீரனூர் பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பேரூராட்சிகளிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் மற்றும் நகராட்சி விநியோகம் பல வாரங்களாக வராமல் முடங்கியுள்ளது.

ஒரு குடம் குடிநீர் ரூ.10 முதல் ரூ.13 வரை விலைக்கு வாங்கப்படுகிறது.இதனால் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அதிகாரிகள் செய்வதறியாது உள்ளனர்.

ஒரு சில இடங்களில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடிக்கின்றனர். குறிப்பாக போர்வெல் மோட்டார் பழுது ஏற்பட்டால் விரைந்து சரிசெய்யாமல் காலதாமதப்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

வரும் நாட்களில் வெயில் வாட்டி எடுக்கப்போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் குடிநீரின் தேவை அதிகமாகும். ஆனால் தேவைக்கு ஏற்றாற்போல் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் கால்நடைகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் காலநடை வளர்ப்போர் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரை கால்நடைக்கு வைக்கின்றனர். சில இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் குடியிருப்பவர்கள் தெரியாமல் தண்ணீர் எடுத்து சிறிய தோட்டம் ஏற்பாடு செய்கின்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் செயற்கை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகளால் தடுக்க முடிய வில்லை. குடிநீர் பிரச்னைக்காகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நாட்களில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை கண்டிப்பாக ஏற்படும் என்று அதிகாரிகள் அச்சப்படு கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்துவிட்டது.
இதனால் ஏரி, குளங்களில் தண்ணீரின்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் பெய்யும் மழையும் ஏரி, குளங்களுக்கு வந்து சேர்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் வரத்து வாரிகளை தூர் வாருவதில்லை.

முன்பெல்லாம் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் தண்ணீர் வரவில்லை என்றால் வயல் பகுதியில் உள்ள கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது வயல்களில் உள்ள கிணறுகளும் வறண்டுவிட்டது.இதனால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரை மட்டுமே மக்கள் நம்பி உள்ளனர். அவர்களும் முறையாக வழங்குவதில்லை. குடிநீர் பிரச்னைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஏரிகளை தூர்வார வேண்டும்

இது குறித்து விவசாயி ராப்பூசல் கருப்பையா கூறியதாவது: குடிநீர் தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்காததே ஆகும். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் வரத்து வாரிகளை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

ஆனால் அதிகாரிகள் எந்த கோரிக்கையையும் நிறை வேற்றவில்லை. இதனால் நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை. லாரிகளில் குடிநீர் வாங்கும் நிலைக்கு பாமர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : PUDUKKOTA DISTRICT ,SOUTHWEST DISTRICT ,Pudukkottai district ,
× RELATED மதுரை அழகர் கோவிலில் ஆண்டுக்கு...