×

30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பழுதடைந்த கட்டிடத்தை இடித்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்

*பயணிகள் கோரிக்கை

திருப்பத்தூர் : திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், சென்னை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் இந்த பேருந்து நிலையம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், இதுவரை முழுமையான சீரமைப்பு அல்லது புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் கட்டிடப் பகுதிகளில் பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, மேல்தளத்தில் வளர்ந்து வரும் அரசமரத்தின் வேர்கள் கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரை பகுதிகளை சேதமடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் கட்டிடத்தின் சில பகுதிகள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் மேற்கூரையின் கீழ் அமர்ந்து இருப்பதால், திடீரென கட்டிட பகுதிகள் இடிந்து விழுந்தால், உயிரிழப்பு அல்லது காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலைய வளாகத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழக்கடைகள், பூக்கடைகள் மற்றும் பிற வணிகக் கடைகள் பேருந்து நிலையத்தின் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால், பயணிகள் நடந்து செல்லவும், பேருந்துகளில் ஏறி இறங்கவும் சிரமம் ஏற்படுகிறது.

பேருந்துகள் வந்து செல்லும் சாலைகளும், மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சாலைகள் பல இடங்களில் பள்ளம் மற்றும் மேடுகளாக காணப்படுவதால், பயணிகள் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் முறையான பராமரிப்பு இன்றி மிகவும் துர்நாற்றம் வீசும் நிலையில் இருப்பதாகவும், இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அருகிலுள்ள வாகன நிறுத்துமிடங்களில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதால், பேருந்து நிலைய வளாகத்திலேயே இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் பேருந்து நிலையம் வாகன நிறுத்துமிடமாக மாறி, பயணிகள் நடந்து செல்லக்கூட இடமின்றி சிரமப்படுகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி ஆணையர் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருப்பத்தூர் எம்எல்ஏ திருப்பதி பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupattur ,Vaniyambadi ,Ambur ,Vellore ,Chennai ,Salem ,Puducherry ,
× RELATED மதுரை அழகர் கோவிலில் ஆண்டுக்கு...