சென்னை: கடந்த 2024ம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பிரசாரம் மேற்கொள்ள தடை அமலில் இருந்த போது தனது பேஸ்புக் பக்கத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் காவல்துறை மாணிக்கம் தாகூர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் தாகூர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணிக்கம் தாகூர் தரப்பில் வழக்கறிஞர் விவேக் ஆஜராகி, மாஜிஸ்திரேட் முன்அனுமதி பெறாமல் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையற்ற குற்றங்கள் என்பதால் மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெறாமல் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கக் கூடாது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணிக்கம் தாகூர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
