புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜால்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,\\” இந்த விவகாரத்தில் டெல்லி மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மேலும் மாணவர்கள் மீது மின்சார ஷாக் கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது., ஆணி அடிக்கப்பட்ட கம்புகள், கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தது மட்டுமில்லாமல், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக போராட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் சீருடையிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தது. இது சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். அதேப்போன்று போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் இல்லாதவர்களையும் பயன்படுத்தி உள்ளனர். பெல்லட் குண்டு மூலம் சுட்டதால் ஒரு சிறுவன் பார்வை இழந்து உள்ளார் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,\\” வன்முறையில் 250 போலீசார் காயமடைந்துள்ளனர். அமைதியாக போராடிய மாணவர் குழுவிற்குள் கொலை, பாலியல் அத்துமீறல் மற்றும் போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய சமூக விரோதிகள் புகுந்து வன்முறையை தூண்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\”நீட் எதிர்ப்பு மற்றும் வினாத்தாள் கசிவு ஆகியவைக்கு எதிராக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது என்ன விதமான ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தலைநகர் டெல்லி, பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம் ஆகிய பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் போராட்டம் தொடர்பான அனைத்து விதமான அதாவது சிசிடிவி பதிவுகள் உட்பட ஆவணங்களையும் பாதுகாத்து வைக்க வேண்டும். இருப்பினும் தற்போது மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அதற்கு தடை விதிக்கிறோம். குறிப்பாக கிரிமினல் குற்றப்பின்னணி இல்லாமல் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இருப்பினும் போராட்டங்களின் போது பின்பற்றுவதற்காக காவல்துறைக்கு புதிய நடைமுறைகள் தேவைப்படுகிறது. முன்னதாக இருக்கும் விதிகளை போலீசார் பின்பற்றியதாக தெரியவில்லை.
யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். அதனை உறுதி செய்யாமல் நடத்தப்படும் விசாரணை அர்த்தமற்றது ஆகும். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை தேவைப்படுகிறது. குறிப்பாக மாணவர் போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கூறிய மத்திய அரசின் வாதங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
