வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை சோளிங்கர் தவெக எம்எல்ஏ கபில் தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது யூடியூபர் சிவா, தவெக கட்சியினரிடம் படத்தின் ரிவ்யூ கேட்டுக் கொண்டிருந்தார். எம்எல்ஏ கபில் வந்தபோதும் மைக்கை காட்டி, படம் குறித்து விமர்சனம் கேட்டுள்ளார். அப்போது, எம்எல்ஏ கபில், அந்த யூடியூபரை தாக்க முயன்றுள்ளார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்த செய்தி டிவிகளில் வெளியானது. இதையடுத்து, திரையிட்ட தியேட்டருக்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளில் நிருபர்கள், யூ டியூபர்கள் யார்? யார்? வந்தார்கள் என்பது குறித்து எம்எல்ஏ தரப்பினர் ஆய்வு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் யூடியூபரின் வீட்டிற்கு எம்எல்ஏ கபில் மற்றும் அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் 10க்கும் மேற்பட்டவர்கள் சென்று, அவரை வலுக்கட்டாயமாக அவரது ஸ்டூடியோ கடைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். இச்சம்பவத்தை தினகரன் நிருபர் அரங்கநாதன்(50), தினமலர் நிருபர் கல்யாணசுந்தரம்(70) உட்பட 5 பேர் செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர்.
இதைப்பார்த்த கபில், அவரது தம்பி தனஞ்செழியன் உட்பட 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஆவேசத்துடன் அரங்கநாதன் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகிய இருவரையும் சுற்றிவளைத்து கடையின் உள்ளே தள்ளி ஷட்டரை பூட்டிக்கொண்டு சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து வந்த போலீசார் முன்னிலையில் நிருபர்களின் செல்போன்களை பிடுங்கி அதில் பதிவான வீடியோக்களை அழித்து உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து எம்எல்ஏ கபில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காரில் ஏறி சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த பத்திரிகையாளர்கள் அரங்கநாதன், கல்யாண சுந்தரம், சிவா ஆகிய 3 பேரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து காயமடைந்தவர்கள் அளித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய தவெக எம்எல்ஏ தலைமையிலான கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர் களின் உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
* பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஆரணி தாலுகா அலுவலகம், குடியாத்தம் பஸ்நிலையம் ஆகிய இடங்களிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் காட்சி ஊடகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களை கொடூரமாக தாக்கிய சோளிங்கர் எம்எல்ஏ கபில் அவரது தம்பி மற்றும் 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
