சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்கிய தவெக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்: போலீசாருடன் கடும் தள்ளுமுள்ளு

 

சேலம்: சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்கிய தவெக அரசை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று காலை, மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறமுள்ள சேலம் கோட்டை மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மோகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள், மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை 25 ஆண்டுகள் மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனத்துக்கு ரூ.4,295 கோடியில் ஒப்பந்தத்தை தவெக அரசு மேற்கொண்டுள்ளதை கண்டித்தும், இதை உடனடியாக ரத்து செய்துவிட்டு, குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி நிர்வாகமே மேற்கொள்ள வலியுறுத்தியும் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட போலீசார், வழியில் கயிறு கட்டியும், இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தியும் 3 இடங்களில் தடுத்தனர்.

முதல் தடுப்பை மீறி 30க்கும் மேற்பட்டோர், மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி ஓடினர். அங்கு 2வது தடுப்பில், போலீசார் மறித்தனர். அப்போது, போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கீழே தவறி விழுந்தனர். இதையும் மீறி 3 பேர், மாநகராட்சி அலுவலகம் முன்பு சென்று, குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு வழங்கிய தவெக அரசையும், கைது செய்ய முற்பட்ட போலீசாரையும் கண்டித்து கோஷமிட்டனர். 3 இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்ட நிர்வாகிகள், 7 பெண்கள் உள்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த போராட்டம் மற்றும் போலீசாருடன் தள்ளுமுள்ளு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* விஜய்க்கு கண்டனம்

கைதான மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மோகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பதன் மூலம், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.20 என்ற அளவிற்கு கூட நிர்ணயித்து கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் இந்த ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கிய முதல்வர் விஜய்யையும், தவெக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்,’’ என்றார்.

Related Stories: