×

காங்கோவில் 17வது எபோலா தொற்று தீவிரம்; தடுப்பூசி, சிகிச்சை உருவாக்கும் முயற்சிகள் வேகம்

பிரஸ்ஸாவில்லி: ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் 17வது எபோலா தொற்று மேலும் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 375 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1,354 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் ஆயிரம் புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியிருப்பது கவலைக்குரியதாக உள்ளது. கடந்த மே 15ஆம் தேதி இந்த எபோலா பரவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக வன்முறை மற்றும் ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு காங்கோ பகுதிகளிலேயே தற்போது தொற்று அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக தெற்கு சூடான் மற்றும் உகாண்டா நாடுகளின் எல்லையை ஒட்டிய இடூரி மாகாணத்தில் மட்டும், மொத்த பாதிப்புகளில் சுமார் 90 சதவீதம் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய தொற்று புண்டிபுக்யோ வகை எபோலா வைரஸால் ஏற்படுகிறது. இந்த வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை. இருப்பினும், நோய்த் தொற்றைக் கண்டறியும் பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், மேலும் பல நோயாளிகளை விரைவாக அடையாளம் காண முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் திரவங்கள் மூலம் பரவும் எபோலா வைரஸ், தீவிர இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடியது. கடந்த 50 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் மட்டும் 15,000-க்கும் அதிகமானோர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, புண்டிபுக்யோ வகை எபோலாவுக்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய பரிசோதனைத் தடுப்பூசி முதல் தன்னார்வலர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பல தடுப்பூசிகள் மற்றும் இரண்டு சிகிச்சை மருந்துகள் மருத்துவப் பரிசோதனைக்குத் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது எபோலா நோய் பரவும் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : 17th Ebola ,Congo ,Pressaville ,17th Ebola epidemic ,Democratic Republic of the Congo ,
× RELATED ரஷ்யா–ஈரான் ரகசிய ஒத்துழைப்பு?...