சென்னை: உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, வழக்கமான குளிர்ச்சியான இரவுகள் மறைந்து, வெப்பமான இரவுகள் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிளைமேட் சென்ட்ரல் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கையின்படி, வெப்பமான இரவுகளால் சராசரியாக ஆண்டுக்கு 93 மணி நேரம் உறக்கத்தை இழந்து, இந்தியாவின் ‘தூக்கமற்ற தலைநகராக’ சென்னை மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், 2020 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் வெப்பமான இரவுகளால் மக்கள் ஆண்டுக்கு சராசரியாக 56 மணி நேரம் உறக்கத்தை இழந்துள்ளனர். தென்னிந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் இந்தப் பாதிப்பில் முன்னிலையில் உள்ளன.
குறிப்பாக, ஆழ்ந்த உறக்கத்திற்குத் தேவையான உடல் வெப்பநிலையைக் குறைக்கும் இயற்கையான செயல்முறையை, வெப்பமான இரவுகள் கடுமையாக பாதிக்கின்றன. இதன் காரணமாக இதய நோய், நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
