×

கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

*கலெக்டர் வந்தனா கார்க் வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் வந்தனா கார்க் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 400க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன்மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும், கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறைவாரியாக ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு கண்டு, உரிய பதிலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அமர வைக்கப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வந்தனா கார்க், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.14,490 மதிப்பிலான ஸ்மார்ட் போன் ரூ.6,262 மதிப்பிலான கருப்பு கண்ணாடி, மடக்கு குச்சி, பிரெய்லி கடிகாரம், கைதாங்கி உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினார்.

மேலும், 15 நபர்களுக்கு சிறுப்பான்மையினர் நலத்துறை சார்பில் நலவாரிய அடையாள அட்டை, வீட்டுமனைப்பட்டா ஆகியவற்றை வழங்கினார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்வு முகாமிற்கு வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்நிலையில், கலசபாக்கம் தாலுகா, அருணகிரிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திருவள்ளுவர் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சாலை வசதி கேட்டு மனு அளித்தனர். சாலை வசதியில்லாமல், மாற்று வழியை பயன்படுத்தி நீண்ட தூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

அதேபோல், அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 3 பேர், முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

மேலும், திருவண்ணாமலை மாவட்ட பெண்கள் இணைப்புக்குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள, விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கான நலன்களை பாதுகாக்கும் திட்டங்களை வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Tags : Collector ,Vandana Garg ,Tiruvannamalai ,Thiruvannamalai ,
× RELATED ஓவியர் டிராட்ஸ்கி மருதுக்கு இயல்...