சென்னை: தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையில் சார்பில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப்படுவதாகவும், உடனடியாக தீர்வு கிடைப்பதில்லை என்றும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம்கள் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில்தான் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு ஐந்து வேலை நாட்களுக்குள் உரிய தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக தனியாக ஒரு பதிவேடு ஒவ்வொரு அலுவலகங்களிலும் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்’’ என்றனர்.
