வேலூர்: காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவேன் என இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர், காட்பாடி அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அரி (27), டிரைவர். இவரும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். இந்நிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலை கைவிட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரி, இளம்பெண்ணை மீண்டும் பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இளம்பெண், காதலை ஏற்க மறுத்துள்ளார். பலமுறை வற்புறுத்தியும் இளம்பெண் சம்மதிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அரி, சமீபத்தில் இளம்பெண்ைண சந்தித்து தன்னை காதலிக்க மறுத்தால் உன் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்தாராம். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் காட்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரியை கைது செய்தனர்.
