×

கோயில் திருவிழாவில் மோதல் 2,000 போலீஸ் குவிப்பு: புதுகை அருகே பரபரப்பு

கந்தர்வக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டியில் மூங்கில் அய்யனார் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. மண்டகப்படி ஒதுக்குவதில் இரு தரப்பினிரிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து ஒரு நாள் மட்டும் திருவிழா நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதன்படி கடந்த 24ம் தேதி திருவிழா நடந்தது. அப்போது சுவாமி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் இருதரப்பிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நீதிமன்றத்தில் விழா நடத்த அனுமதி வாங்கிய தரப்பினர் புதுகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். நீண்டநேரம் நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உற்சவர் சிலையை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது எதிர் தரப்பினர் சிலையை எடுத்துச்சென்ற வாகனத்தின் முன் படுத்து தர்ணா போராட்டம் செய்தனர். சிலர் கற்களை எடுத்து போலீசார், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்த வாகனங்கள் மீது வீசி தாக்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த கல்வீச்சில் தஞ்சை ஆயுதப்படை போலீஸ்காரர் ஜோன்சின் காயமடைந்தார்.

பின்னர், சாமி சிலை போலீஸ் பாதுகாப்புடன் உதவி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் சிலை பாதுகாப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. திருச்சி சரக டிஐஜி சிபி சக்கரவர்த்தி, தஞ்சை எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் வந்து சாமி சிலையை எடுத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாமி சிலையை கொண்டு வந்தால்தான் கலைந்து செல்வோம் என அவர்கள் தெரிவித்தனர். இதன்பின்னர் நேற்று முன்தினம் மாலை போலீஸ் பாதுகாப்புடன் சிலையை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வந்து வைத்தனர். பின்னர் கோயில் பூட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்ட போலீசார் 2 ஆயிரம் பேர் டிஎஸ்பி பிருந்தா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Pudukkottai ,Kandharvakottai ,Ayyanar ,Valavampatti ,Hindu Religious and Endowments Department ,
× RELATED காவிரி விவகாரம்: நேரடியாக...