சென்னை: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாக சகாயம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பாதுகாப்பு வழங்க டிஜிபிக்கு உத்தரவிட்டு சகாயம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், நாமக்கல், மதுரை மாவட்டங்களில் கலெக்டராகவும், தமிழகத்தின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவர் ஐகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையராக பணியாற்றி, கிரானைட் குவாரிகளில் நடந்த மாபெரும் ஊழலை வெளியில் கொண்டு வந்தார்.
என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக முடியாது என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் புகார் தெரிவித்து இருந்தார். அவர் தரப்பில் பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்த போது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என சகாயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, பாதுகாப்பு வழங்க கோரி மனுதாரர் அளித்த மனு, மறு ஆய்வுக் குழு பரிசீலனையில் உள்ளது என போலீசார் விளக்கம் அளித்தனர். பிறகு ஐஏஎஸ் சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
