*போதிய இடம் இல்லாததால் இடுகாட்டில் குப்பைகளை தீயிட்டு எரிக்கும் அவலம்
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சலவாதி சாலையில் நகராட்சி குப்பை கிடங்கு அருகே இடுகாடு அமைந்துள்ளது. நகராட்சியில் கொட்டப்படும் பாதி குப்பைகளை இடுகாட்டு பகுதியில் நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர்.
ஏற்கனவே சுடுகாட்டிற்கு போதுமான இடமில்லாததாலும் குப்பைகளை கொட்டி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாலும் அப்பகுதிகளில் உடல்களை புதைக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சி அருகே குப்பை கிடங்கின் பாதி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது. இதனால் அப்பகுதியில் குப்பைகளை கொட்டி அவைகளை தரம் பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாமல், நகராட்சியினர் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாவதாக பலமுறை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடமும், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவிடமும், நகராட்சி வேலூர் மண்டல துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இடங்களை தேர்வு செய்யும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் நகராட்சியில் சேமிக்கப்படும் டன் கணக்கான குப்பைகள் மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படாமல் அப்பகுதியிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த குப்பைகளில் வேதியல் மாற்றம் காரணமாக அவ்வப்போது தீ பற்றி எரிகிறது. சமீபத்தில் குப்பை கிடங்கில் நகராட்சியின் 33 வார்டுகளிலும் சேகரிக்கப்பட்ட நார் மெத்தை கழிவுகள் அப்பகுதியில் உள்ள ஒரு குடோனில் சேமிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதில் திடீரென தீப்பற்றி குடோன் முழுவதும் எரிந்து சேதமானது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் நகராட்சி குப்பை கிடங்குகள் எப்போது தீப்பற்றும் என்ற நிலையிலேயே இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நகராட்சி குப்பை கிடங்கின் அருகில் உள்ள இடுகாட்டில் அதிக அளவில் மருத்துவ கழிவுகள் தற்போது கொட்டப்பட்டு வருகிறது. அந்த மருத்துவக் கழிவுகளுக்கு நேற்று நகராட்சி ஊழியர்களால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த தீயால் வெண்ணிற புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இதனால் அருகில் இருந்த உணவகங்கள் மற்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டம் பரவியது.
மேலும் அருகில் இருந்த புதிய பேருந்து நிலையம் பகுதி வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த புகை சூழ்ந்ததால் பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டது. மேலும் சென்னை செல்லும் வழியில் ஓய்விற்காக அதிக மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் உணவகங்கள் முழுவதும் துர்நாற்றத்துடன் இந்த புகை வீசியதால் பலர் அப்பகுதியில் இருந்து வேகமாக வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
மேலும் சாலை முழுவதும் பரவிய வெண்ணிற புகையால் வாகனங்களில் விபத்து அபாயத்துடன் பயணித்தனர். இது குறித்து அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு மருத்துவக் கழிவுகள் எரிந்து கொண்டு இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து நகராட்சியை தொடர்பு கொண்டாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும், தொடர்ந்து இதுபோல மருத்துவ கழிவுகள் கொட்டி எரிக்கப்படுவதாகவும் அவ்வப்போது இரவில் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் நகராட்சி சார்பில் இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் குப்பை கிடங்கிற்கு போதுமான இடமில்லாததால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
