×

கடையம், ஆழ்வார்குறிச்சியில் சுடுகாட்டில் வெள்ளநீர் புகுவதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு

* ஆயிரப்பேரி, விகேபுரம் மின்தகன மேடைக்கு கொண்டு செல்லும் அவலம்

* ஆம்புலன்சிற்கு பணம் கொடுக்க வசதியில்லாதவர்கள் காத்திருக்கும் கொடூரம்

கடையம் : கடையத்தில் ஆற்றங்கரையோர சுடுகாட்டில் மழைக்காலத்தில் வெள்ளநீர் புகுவதால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

20 கிமீ தொலைவில் உள்ள ஆயிரப்பேரி, விகேபுரம் மின்தகன மேடைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்சிற்கு பணம் கொடுக்க வசதியில்லாதவர்கள் வெள்ளம் குறையும் வரை இறந்தவர்களை உடல்களை வைத்திருக்கும் கொடூர சூழல் இன்றளவும் நிலவுவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகி்னறனர்.

கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை ஆற்றங்கரையோரம் மற்றும் கால்வாய் ஓரங்களில் உள்ள பாரம்பரிய சுடுகாடுகளில் தகனம் செய்து வருகின்றனர். ஆனால், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது இந்த இடங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் பணமுள்ள வசதி படைத்தவர்கள் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரி அல்லது நெல்லை மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் உள்ள மின் தகன மேடைக்கு இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆனால் பண வசதியில்லாதவர்கள் வெள்ள நீர் குறையும் வரை காத்திருந்து சுடுகாட்டில் அடக்கம் செய்தும் கொடூரம் இன்றளவும் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகின்றனர். இப்பிரச்னையில் மாவட்டம் நிர்வாகம் தலையிட்டு கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் மின் தகன மேடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “மழைக்காலத்தில் உடலைத் தகனம் செய்யக்கூட முடியாத அவல நிலை உள்ளது. உள்ளூரிலேயே மின் தகன மேடை அமைக்கப்பட்டால் எங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறும்.

இப்பகுதியில் மின் தகன மேடை அமைப்பதற்கு ஏற்ற இட வசதி உள்ளது. ஆனால் இதுவரை மின் தகன மேடை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடையம் பகுதி மக்களின் ஒருமித்த குரலாக, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பது தான்.

இனிவருங்காலங்களிலாவது அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இந்த கோரிக்கையை விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடையம், ஆழ்வார்குறிச்சி பகுதியில் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி பேரூராட்சியாக இருந்தாலும் இதுவரை மின் தகன மேடை அமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு வடகிழக்கு பருவமழையின் போது மக்கள் இந்த சிரமத்தை எதிர் கொண்டு வருகின்றனர்.

தற்போது ஒட்டு மொத்த மக்களுக்கும் கோரிக்கை எழுப்பியுள்ள சூழலில் மாவட்ட நிர்வாகம் இந்த மனிதாபிமான கோரிக்கையை எப்படி முன்னெடுக்கப் போகிறது என்பதை அடுத்த சில நாட்களில் தெரியவரும்’ என்றனர்.

Tags : Kadayam, Alwarkurichi ,Ayraperi, Vikepuram ,Kadayam ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி