×

கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் பெருகி வரும் மயில்கள்

*வேட்டையாடுவது தடுக்கப்படுமா?

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் இருந்து வருவதால் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களில் மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள வெள்ளமணல் கிராமத்திலிருந்து வடரங்கம் கிராமம் வரை பல பகுதிகள் வனத்துறைக்கு சொந்தமாக இருந்து வருகின்றன.

இங்கு பல வகையான மரங்கள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதி மரங்கள் அடர்ந்த பகுதியாக வளர்ந்து காணப்படுகிறது. மேலும் ஆற்றின் கரையை ஒட்டி உள்ள பகுதி முழுவதும் அடர்ந்த காடு போன்று காணப்படுவதால் மயில்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும், அதிவேகத்தில் மயில்கள் இங்கு இனப்பெருக்கம் அடைந்து வருகின்றன. கடந்த 20 வருடத்திற்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் மயிலை பார்ப்பது அரிதாக இருக்கும்.

மயில்கள் அறவே இல்லாத இப்பகுதியில் கடந்த வருடங்களில் படிப்படியாக மயில்கள் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. மயில்கள் ஆற்றின் கரையோர பகுதியில் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இதனால் தொடர்ந்து மயில்கள் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன.

முருகனின் வாகனமாக நினைத்து மயிலை ஆற்றின் கரையோர கிராம மக்கள் பெரிதும் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கொள்ளிடம் ஆற்றில் உப்புநீர் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் புகுந்து விட்டதால் கோடை காலத்தில் அவைகளுக்கு குடிநீர் கிடைப்பது சிரமம் ஆகிறது.

இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களை விட்டு பத்துக்கும் மேற்பட்ட மைல்கள் தூரம் மயில்கள் பறந்து சென்று உணவு மற்றும் தண்ணீரை தேடும் நிலைக்கு உள்ளாகி வருகின்றன. பின்னர் மாலையில் அவைகள் வசிக்கும் இடத்திற்கு திரும்பி வந்து விடுகின்றன.

ஆற்றின் கரையோர பகுதியில் உணவைத் தேடி தரைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றபோது சில சமயங்களில் மயில்களை நாய்கள் வேட்டையாடுகின்றன. மேலும் வெளியில் இருந்தும் சிலர் மயில்களை வேட்டையாடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேசிய பறவையான மயிலை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் மயில்களை தீவிரமாக கண்காணித்து உரிய இடங்களில் அதிக வெப்ப காலங்களில் அவைகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் தண்ணீர் வைக்கவும், வெளியாட்கள் வேட்டையாடுவதை தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆற்றின் கரையோர கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Koldinda River, ,Mayiladudura district ,
× RELATED பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே ரயில் மோதியதில் 9 ஆடுகள் பலி