*போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
ஆரணி : கோயில் நிலம் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆரணி காவல் நிலையத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காட்டேரி கிராமத்தில் ஊர் எல்லையில் கிராம மக்களின் குலதெய்வமான சப்த கன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 42 சென்ட் நிலம் கோயிலை சுற்றி உள்ளது. இந்ந நிலம் கிராம மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த கோயில் நிலத்தை தனி நபர்கள் சிலரும், திருவாழி நல்லூர் கிராமத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த ஒருவரும் ஆக்கிரமித்து வைத்து கொண்டு, பட்டா கேட்டு தாலுகா, ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.
இதனால், கிராம மக்கள் கோயில் இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்ததில் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனால், அந்த இடத்திற்கு அதிகாரிகள் பட்டா வழங்கவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் இடத்தை ஆக்கிரமித்த தனி நபர்கள் சிலரும், அதிமுகவை சேர்ந்தவரும் சேர்ந்து டிராக்டரில் உழுதுள்ளனர். இதனால், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கடந்த 23ம் தேதி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை அகற்றி சுற்றிலும் கல்நட்டு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர்.
இதனால், அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த அதிமுகவை சேர்ந்தவர் நேற்று முன்தினம் எனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு வேலி அமைத்துள்ளனர் எனக்கூறி 3 பேர் மீது ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் 3 பேரையும் நேற்று விசாரனைக்காக காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்துள்ளனர். இந்நிலையில், காட்டேரி கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி தாலுகா காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் தனி நபர்கள் கோயில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த இடத்தை அகற்றி, தடுப்பு வேலியை கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததான் அமைத்தோம். ஆனால், அதிமுகவை சேர்ந்தவர் அவருடைய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்தாக 3 பேர் மீது பொய்யாக புகார் அளித்துள்ளார். அந்த இடத்திற்கும் அவருக்கும் எந்த சம்மந்தமுமில்லை என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், புகார் அளித்த அந்த நபரை நேரில் வரவழைத்து விசாரிக்க வேண்டும். கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
உடனே, போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ‘அதிமுகவை சேர்ந்தவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். அவர் புகாரை தெரியாமல் தவறுதலாக கொடுத்துவிட்டதாகவும், அதனால் புகாரை திரும்ப பெற்று கொள்வதாகவும், இந்த பிரச்சனையை தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்து பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால் நீங்கள் அனைவரும் வீட்டிற்கு செல்லலாம்’ என போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, ஊர் பொதுமக்கள் மீது பொய்யான புகார் அளித்துள்ளவர் மீது நாங்கள் புகார் அளிக்கிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீசாருடன் மீண்டும் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
