திருவொற்றியூர்: திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை மீட்க புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருவொற்றியூர் தொகுதியில் உள்ள எர்ணாவூர், மணலி மற்றும் மாதவரம் தொகுதி சுமார் 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. கடந்த 1970ம் ஆண்டு இந்த பகுதிகளில் தனியார் மற்றும் ஒன்றிய, மாநில அரசு நிலங்கள் பெரும்பாலும் காலியிடங்களாக இருந்தது. ஆனால் தற்போது இந்த காலியிடங்களில் சிறிய, பெரிய மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள், ஒன்றிய, மாநில, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சரக்கு பெட்டகங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதன் காரணமாக கடந்த 2006-2011ம் ஆண்டு மேற்கண்ட பகுதிகளை சென்னை மாநகராட்சியோடு இணைக்க திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, 2011ம் ஆண்டு நகராட்சியாக இருந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பல பகுதிகள் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக 2021-26ம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள், பள்ளிக்கூடங்கள், தெருவிளக்குகள், பூங்காக்கள், படகு குழாம், புதிய பேருந்து நிலையம், உடற்பயிற்சி கூடம் போன்ற ஏராளமான புதிய திட்டங்கள் அமைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பு நிலங்களின் மதிப்பு 300 மடங்கு உயர்ந்துள்ளது.
வடசென்னை என்றாலே வளர்ச்சி அடையாத பகுதி என்ற நிலை மாறி, தற்போது மேம்படுத்தப்பட்ட பகுதியாக உருமாறி வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் வடசென்னையின் வளர்ச்சி என்பது மற்ற நகரங்களை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், மாதவரம் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்கள் இருந்தன. இவைகளில் புறம்போக்கு நிலங்களன நீர்நிலைகள், குளங்கள், ஏரிக்கரைகள், பூங்காக்கள். கிணறுகள், கோயில் நிலங்கள் போன்றவை போலி ஆவணங்கள் மூலம் பட்டா பெற்று வீடுகளாகவும், மனைகளாகவும் மாறியுள்ளது. 1970ம் ஆண்டு சிட்டா, அடங்கல் பட்டியல்படி அரசு புறம்போக்கு நிலங்கள் என்று குறிப்பிட்ட பல இடங்கள், எந்தவித அரசு ஆணையின்றி தற்போது பட்டா நிலங்களாக மாறியுள்ளது.
இவ்வாறு மாற்றப்பட்ட நிலங்கள் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள இந்த அரசு நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு அந்தந்த காலகட்டத்தில் உள்ள தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களைமீட்கவும், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டது குறித்து விசாரணை நடத்தி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம்-1905ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசின் நிதிச்சுமையை சமாளிக்க நடவடிக்கை
திருவொற்றியூர், மாதவரம் தொகுதி மட்டுமின்றி தமிழகத்தில் முழுவதும் சாலைகள், கோயில் நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் உள்ளாட்சிக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலங்கள் என மொத்தம் சுமார் 1.84 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வப்போது சில ஆக்கிரமிப்புகளை அரசு அகற்றினால் முழுமையாக அகற்ற முடியாத நிலை உள்ளது. சட்டங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தாலும் இந்த ஆக்கிரமிப்புகளில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் தலையீடுகள் இருப்பதால் இதை செயல்படுத்துவது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இதற்கு மாற்றாக காலியாக உள்ள அரசு நிலங்களை பாதுகாக்கவும், தற்போது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கல்லூரிகள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, இவற்றில் மீட்க முடியாது என்ற அரசு நிலங்களை விரைவில் நடவடிக்கை எடுப்போம் என ஆண்டுகளை கடத்தாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கே அரசின் வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் விற்பனை செய்யவும், வறுமை கோட்டிற்கு கீழ் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களுக்கு நிபந்தனையுடன் இலவசமாக வீட்டுமனையை வழங்க புதிய அரசாணையை உருவாக்க வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் சட்ட நடவடிக்கைக்கான செலவுகள் தவிர்க்கப்படுவதோடு, தற்போது உள்ள அரசின் நிதி சுமையை சமாளிக்க உதவியாக இருக்கும் என பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
சாத்தாங்காடு ஏரி ஆக்கிரமிப்பு
திருவொற்றியூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சாத்தாங்காடு ஏரி உள்ளது. சுமார் 135 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரி மழைநீர் சேமிப்பிற்காகவும், நிலைத்த நீரை பாதுகாக்கவும் பயன்பட்டு வருகிறது. இந்த ஏரியை ஒன்றிய அரசு மற்றும் தனியார் பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதால், தற்போது 70 ஏக்கராக சுருங்கியுள்ளது. இந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க கடந்த 2024ம் ஆண்டு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அந்த திட்டம் ஏன் கைவிப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அனுமதி வழங்கியது எப்படி?
திருவொற்றியூர் கார்கில் வெற்றி நகர், ராஜாஜி நகர், எர்ணாவூர், வடபெரும்பாக்கம், கொசப்பூர், மணலி புதுநகர் போன்ற பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் சாலையோரம் வசித்த மற்றும் ஏழை எளிய மக்கள் குடிசைகளை அமைத்து பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்களுடன் முதலாளிகள் சிலர் வருவாய்த்துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் இந்த அரசு புறம்போக்கு நிலத்தில் சிறு தொழிற்சாலைகள், குடோன்கள், லாரி ஷெட்டுகள், பழைய பிளாஸ்டிக், இரும்பு கடைகள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சடையங்குப்பத்தில் போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு அரசு நிலத்தில் சுமார் 57 தொழிற்சாலைகள் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படுகிறது.
மேலும் ராஜாஜி நகர், கார்கில் நகர், எர்ணாவூர், மாத்தூர் போன்ற பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லக்கூடிய உயர் மின்னழுத்த கம்பி பாதைக்கு கீழே இதுபோல் ஏராளமான தனியார் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவ்வாறு நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து நடைபெற்று வரும் பட்டறைகள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு தீயணைப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி சார்பில் தொழில் உரிமம் மற்றும் மின் இணைப்புகள் எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாடகை கட்டிடத்தில் அரசு அலுவலகங்கள்
திருவொற்றியூரில் நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், மணலி மின்வாரிய அலுவலகம், மாதவரத்தில் சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் மற்றும் ரேஷன் கடைகள் போன்றவை பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் இதுவரை பல கோடி ரூபாயை அரசு வாடகையாக செலுத்தியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள், இன்னும் பல அதிகாரிகள் பணியாற்றுவதற்கு அலுவலகங்கள் கட்ட இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு, அரசு அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
