அயராத 5 ஆண்டு முயற்சியால் திமுக ஆட்சியில் தலை நிமிர்ந்த தமிழ்நாடு: உறுதிப்படுத்தியது நிதி ஆயோக் அறிக்கை

2021 மே 7ம் தேதி, தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது, அவர் முன்னின்ற சவால்கள் ஏராளம். கொரோனா பரவல், நிதி நெருக்கடி என சிக்கலான சூழலில் (சுழலில்) தமிழகம் சிக்கியிருந்தது. முதலில், இவற்றுக்கெல்லாம் தீர்வு கண்ட பிறகு தான் தமிழ்நாட்டின் நிலையை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கவே முடியும் என்ற இக்கட்டான நிலை அது.

ஆனால், ஒரு புறம் கொரோனா இடரிலிருந்து மக்களை மீட்பதும் மறுபுறம் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றத் தலைப்படும் முயற்சிகளில் ஒன்றாக முதலீட்டு வாய்ப்புகளை பெருக்குவதற்காக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற முயற்சிகளை அரசு மேற்கொண்டதன் விளைவாக, ஆட்சி அமைந்து ஓராண்டுக்குள்ளாகவே, அதாவது 4 ஜூலை 2022ம் தேதி முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.95 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான 132 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

தமிழ்நாட்டின் பொருளாதாரம் இனி 4 கால் பாய்ச்சலில் ஓடும் என்பதற்கு அச்சாரமான நிகழ்வு அது. இந்த ஓராண்டு முயற்சியை முன்னிறுத்தி தான், 2023-ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட கடலோர மாநிலங்களுக்கான ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. நம்பர் 1 மாநிலம் மட்டுமல்ல, ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டக்கூடிய முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு, இதை சாத்தியமாக்க கூடிய அத்தனை பகீரத முயற்சிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. முதலீடுகள் எண் திசைகளில் இருந்தும் குவிந்தன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்தில், அதாவது, சட்டப்பேரவை தேர்தலுக்கு 2 மாதம் முன்பாக அப்போதைய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக ஆட்சியில் 5 ஆண்டில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளை அறிக்கையாக வெளியிட்டார்.

அதன்படி 5 ஆண்டில் ரூ.12.37 லட்சம் கோடி முதலீடு தொடர்பாக 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 36.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தங்களில் 867 ஒப்பந்தங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அதாவது 73.53 சதவீதம் முடியும் தறுவாயில் உள்ளது. இதில் 35.11 சதவீதம் திட்ட முதலீடுகள் நிறைவடைந்து தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன என தெரிவித்திருந்தார்.

இந்த திமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களை ஆய்வு அறிக்கையை நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த 2024 ஜூலையில் நடந்த நிதி ஆயோக்கின் 9வது நிர்வாகக் குழு கூட்டத்தில், முதலீடுகளை ஈர்க்க தேவையான முக்கியக் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கிய முதலீட்டுக்கு உகந்த ஆவணம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பை, பிரதமர் நரேந்திர மோடி நிதி ஆயோக்கிடம் ஒப்படைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாநிலங்கள் முழுவதும் சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதன் மூலமும், முதலீட்டுக்கு உகந்த சூழலை வளர்ப்பதன் மூலமும் போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், ‘முதலீட்டுக்கு உகந்த சூழல் குறியீடு’ ஒன்றை உருவாக்குவது பற்றி 2025-26 ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த சர்வேயில் 28 மாநிலங்கள் 8 யூனியன் பிரதேசங்களில் 1,850 முதலீட்டாளர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

சில முதலீட்டாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் முதலீடு செய்திருப்பதால், மொத்தம் 2,503 கருத்துக்கள் பெறப்பட்டன. முதலீட்டாளர்களின் கருத்துகளை மதிப்பிடும் வகையில், 22 கருத்து அடிப்படையிலான குறியீடுகளின் கீழ் மொத்தம் 41 கேள்விகள் அடங்கிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மேலும், அந்நிய நேரடி முதலீடு, மாநில ஜிடிபி, நிதி குறியீடுகள் தொடர்பாக 2023-24 நிதியாண்டு புள்ளி விவரங்கள், 2019-20 முதல் 2023-24 வரையிலான 5 ஆண்டுக்கான மாநில ஜிடிபி வளர்ச்சி ஆகியவையும் இந்த ஆய்வறிக்கையில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், குஜராத் 56.6 புள்ளிகளுடன் முதலிடத்தையும், மகாராஷ்டிரா 53.7 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், தமிழ்நாடு 53.3 புள்ளிகளுடன்3வது இடத்தையும் பிடித்துள்ளது. பெரிய மாநிலங்கள் பிரிவிலும் 3வது இடத்தை பெற்றுள்ளது. நாட்டின் முதலீட்டு சூழலை பல்வேறு பொருளாதார, நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்த இந்த அறிக்கையில், உள்கட்டமைப்பு (Infrastructure) பிரிவில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

இதுபோல், மாநிலங்களின் செயல்திறன், உள்கட்டமைப்பு, வணிகச் சூழல், வளங்கள், அரசின் கொள்கைகள், ஒழுங்குமுறை எளிமை, நிறுவனச் சூழல், நிதி நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மீள்திறன் ஆகிய 6 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மீள்திறன் (80%), நிறுவனச் சூழல் (70%), ஒழுங்குமுறை எளிமை (67%), நிதி நிலைத்தன்மை (64%), உள்கட்டமைப்பு (54%), வணிகச் சூழல் (46%), வளங்கள் (45%), அரசின் கொள்கைகள் (30%) ஆகிய புள்ளிகளை பெற்றுள்ளது.

முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு சிறந்த துறைமுக உள்கட்டமைப்பு, நம்பகமான மின்விநியோகம், முதலீட்டுக்கு உகந்த வணிகச் சூழல் மற்றும் வலுவான ஏற்றுமதி செயல்திறன் ஆகியவை முக்கிய காரணங்களாக இருப்பதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டின் வணிகச் சூழலுக்கு உயர்ந்த மதிப்பீடு கிடைத்துள்ளது.

நாட்டிலேயே 2வது அதிக எண்ணிக்கையிலான அடல் டிங்கரிங் ஆய்வகங்கள், முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஏறக்குறைய 100 சதவீதம் திட்டங்களாக செயல்படுத்தப்பட்டது மற்றும் அரசின் கொள்கை அமலாக்கத்தில் தொடர்ச்சியான நிலைத்தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி ‘Biz Buddy’ மற்றும் ‘Guidance Tamil Nadu’ ஆகிய முதலீட்டாளர் சேவை தளங்கள் மூலம் முழுமையான டிஜிட்டல் சேவைகள், காலக்கெடுவுக்குள் கண்காணிக்கப்படும் குறைதீர்ப்பு நடைமுறை, பெரும்பாலான புகார்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் திறன் ஆகியவற்றைக் கொண்ட வலுவான முதலீட்டாளர் உதவி அமைப்பு தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதாக அறிக்கை கூறியுள்ளது.

மேலும், கப்பல் வந்து சேர்ந்தது முதல், சரக்குகளை ஏற்றி/இறக்கி, மீண்டும் புறப்படும் வரை எடுக்கும் சராசரி நேரத்தில்(Weighted Port Turnaround Time) தமிழ்நாடு நாட்டிலேயே 3வது இடத்தில் உள்ளது. அதேபோல், பெரிய மாநிலங்களின் சராசரியை விட தமிழ்நாட்டில் மிக குறைவான அளவிலேயே மின் தடை நேரம் மற்றும் மின்பரிமாற்ற இழப்புகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, ஏற்றுமதி-மொத்த மாநில ஜிடிபி விகிதத்தில், பெரிய மாநிலங்களின் சராசரியை விட தமிழ்நாடு 36 சதவீதம் அதிகம்.

துறைமுகங்களை இணைக்கும் சாலை வசதிகளிலும் தமிழ்நாடு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் மையங்களை முக்கிய துறைமுகங்களுடன் இணைக்கும் விரிவான சாலை மற்றும் ரயில் இணைப்பு, தொழில்துறைக்கு சாதகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மின்விநியோக அமைப்பு, சிப்காட் மற்றும் சிட்கோ தொழில் பூங்காக்களின் மேம்பட்ட உள்கட்டமைப்பு, மற்றும் திறமையான மனிதவளம் ஆகியவை தமிழ்நாட்டின் முக்கிய பலங்களாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டை ஈர்ப்பதற்கான முயற்சிகள், முதலீட்டாளர் மாநாடுகள் , அயல்நாட்டு பயணங்கள் மூலம் பல பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின வீட்டில் ஏறக்குறைய 100 சதவீதம் அளவுக்கு உண்மையான முதலீடாக மாறி இருக்கிறது என்பதற்கான சாட்சிதான் நிதி ஆயோக்கின் அறிக்கை என தொழில்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

* வடமாநிலங்களுடனான இடைவெளி குறைந்தது
இந்த டாப் 3 மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 0.4 சதவீதம் மட்டுமே. இதுபோல் குஜராத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான வித்தியாசமும் பெரிய அளவில் இல்லை. அடுத்தடுத்த இடங்களில் கோவா (53.1), ஒடிசா (52.4), டெல்லி (49.9), மத்திய பிரதேசம் (48.9), ஆந்திரா (48.7), கர்நாடகா (48.7), ராஜஸ்தான் (48.1) ஆகியவற்றுடன் முதல் 10 இடங்களில் உள்ளன.

ஒன்றிய பாஜ ஆட்சியில் வட மாநிலங்கள் பல வளர்ச்சி அடைந்திருப்பதாக சில தோற்றங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஒட்டுமொத்த அளவில் 3வது இடத்திலும் 17 பெரிய மாநிலங்களில் 3வது இடத்தை தமிழ்நாடு பெற்று இருக்கிறது.

* டாப் 10ல் இல்லாத பாஜ மாநிலங்கள்
ஒன்றியத்திலும் மாநிலத்திலும் பாஜ அல்லது பாஜ கூட்டணி ஆட்சி இருந்தால் அது இரட்டை இன்ஜின் அரசு என்றும், வளர்ச்சி வேகமாக இருக்கும் எனவும் பாஜ தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. ஆனால், இப்படி இரட்டை இன்ஜின் அரசு இயங்கும் உத்தரகாண்ட், அசாம், ஹரியானா, உத்தரபிரதேசம், இமாசல பிரதேசம், கோவா, பீகார் ஆகியவை டாப் 10 பட்டியலுக்குள்ளேயே வரவில்லை.

* உள்கட்டமைப்பில் நம்பர் 1
சிறந்த உள் கட்டமைப்பு என்பதை பொறுத்தவரை பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இது கடந்த திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மட்டுமே காரணம் என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாக தொழில் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேபோல மாநில ஜிடிபி யில் ஏற்றுமதி 36 சதவீதமாக உள்ளது. இது பெரிய மாநிலங்களின் சராசரியை விடவும் அதிகம். உற்பத்தி அதிகரிப்பு மட்டுமின்றி ஏற்றுமதிக்கான வாய்ப்புகளும் உருவாக்கியிருந்ததால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது என்கின்றனர் தொழில் துறையினர்.

* சர்வே எடுக்கப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 36 டாப் 5 மாநிலங்கள்
மாநிலம் புள்ளிகள்
1. குஜராத் 56.6
2. மகாராஷ்டிரா 53.7
3. தமிழ்நாடு 53.3
4. கோவா 53.1
5. ஒடிசா 52.4

* பெரிய மாநிலங்கள் பட்டியலில் டாப் 5
1. குஜராத் 56.6
2. மகாராஷ்டிரா 53.7
3. தமிழ்நாடு 53.3
4. ஒடிசா 52.4
5. மத்திய பிரதேசம் 48.9

* தமிழ்நாடு டாப் மாநிலமாக உருவாக காரணிகள்
உள்கட்டமைப்பு 54%
வணிகச் சூழல் 46%
வளங்கள் 45%
அரசின் கொள்கைகள் 30%
ஒழுங்குமுறை எளிமை 67%
நிறுவனச் சூழல் 70%
நிதி நிலைத்தன்மை 64%
சுற்றுச்சூழல் மீள்திறன் 80%
(மேற்கண்ட அனைத்தும் இந்திய சராசரிக்கும் மேலே அமைந்துள்ளன)

* திமுக ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு
நிதியாண்டு முதலீடு
2021-22 ரூ.22,396 கோடி
2022-23 ரூ.17,247 கோடி
2023-24 ரூ.20,157 கோடி
2024-25 ரூ.24,374 கோடி

Related Stories: