சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் 1ம் தேதி தமிழகம் வர உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராக உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் அறிவித்தபடி, ராகுல் காந்தி ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் வருகிறார்.
அரசியலமைப்பை பாதுகாப்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, சமூக நீதி நிலைநாட்டுவது, இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது என்ற லட்சியங்களுக்காக இடைவிடாது போராடி வரும் ராகுல் காந்தியின் இந்த வருகை, தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் புதிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும். தமிழக மக்கள் சார்பிலும், தமிழக காங்கிரஸ் குடும்பம் சார்பிலும் அவருக்கு மனமார்ந்த வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம். 2029ல் ராகுல் காந்தியை இந்தியாவின் பிரதமராக்கும் இலக்கை நோக்கி நம் பயணம் மேலும் வலுப்பெறட்டும்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
