×

அரசியலில் இருந்து விலகுகிறேன்: 88வது பிறந்த நாளில் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு

 

திண்டிவனம்: அரசியலில் இருந்து விலகுகிறேன். இனி பாமகவை அன்புமணி பார்த்துக் கொள்வார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே 2024 டிசம்பரில் மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனை அறிவித்தபோது மேடையிலேயே மோதல் வெடித்தது. அதன்பிறகு தந்தை, மகன் இடையிலான விரிசல் படிப்படியாக அதிகரிக்க அன்புமணியை கடுமையாக விமர்சித்த ராமதாஸ் அவரை தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தார். ஆனால் அன்புமணியோ, நான் பாமக கட்சி விதிகளின்படி தலைவர் என தேர்தல் ஆணையத்தில் முறையிட இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

இருதரப்பும் பாமக கட்சி, சின்னத்துக்கு உரிமை கோரி நீதிமன்றங்களை நாடிய நிலையில், அன்புமணி தான் பாமக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கட்சி சின்னத்தை கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது அவருக்கு ஒதுக்கியது. இதனால் 2 அணிகளாக பாமக தேர்தலை சந்தித்து. இதில் அன்புமணி பாமக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ராமதாஸ் அணி சரிவை சந்தித்தது. இந்தநிலையில், ராமதாஸ் – சரஸ்வதியின் திருமண நாளையொட்டி அன்புமணி தனது குடும்பத்தினருடன் தைலாபுரம் வந்து சந்தித்து பெற்றோரிடம் ஆசி பெற்றார். அதன்பிறகு இனி எல்லாம் நல்லதே நடக்கும் என்றார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தனியார் கல்லூரியில் ராமதாசின் 88வது பிறந்தநாள் விழா இன்று முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு தலைசுற்றல் வியாதி உள்ளது. இதனால் என்னால் யாரிடமும் சரியாக பேச முடியவில்லை. இருந்தபோதிலும் இன்று எனக்கு 88வது பிறந்தநாள். இதை கல்லூரியில் மாணவர்களுடன் கொண்டாட வேண்டுமென ஆசைப்பட்டேன். இன்று உங்கள் மத்தியில் முக்கியமான ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். அதாவது நான் அரசியலில் இருந்து இன்று முதல் துறவறம் மேற்கொள்கிறேன்.

துறவறம் என்றால் இனி நான் அரசியல் பேச மாட்டேன். என்னை காண வருபவர்களை சந்திப்பேன், பேசுவேன். அரசியல் சம்பந்தமான இனி நான் யாரிடமும் எதையும் பேச மாட்டேன். பாமக அரசியலை இனி முழுமையாக அன்புமணி பார்த்துக் கொள்வார் என்றார். இந்நிகழ்ச்சியில் பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள், பாமகவினர் உடனிருந்தனர். ராமதாசின் திடீர் ஓய்வு அறிவிப்பு பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ramdas ,Dindivanam ,Ramadas ,Palamaka ,Anbumani ,Bamaka ,President ,Muhandan ,
× RELATED நீட் போராட்டத்தால் ஜனநாயகன் பிளாப்: ஆர்பி உதயகுமார் தகவல்