×

டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் தமிழ்நாடு, புதுச்சேரியில் அமித்ஷாவின் 2 நாள் பயணம் திடீர் ரத்து

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொள்ளவிருந்த 2 நாள் பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 2 நாட்கள் பயணமாக, சென்னை வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 11.20 மணியளவில் தனி விமானத்தில், கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து, சென்னை வந்துவிட்டு, சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில், புதுச்சேரி மாநிலத்திற்கு புறப்பட்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல் நாளை காலை 11.30 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து, சென்னைக்கு திரும்பி வரும் அமித்ஷா, சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அதன் பின்பு தனி விமானத்தில், சென்னையில் இருந்து, டெல்லி செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.

அமித்ஷா வருகையையொட்டி, சென்னை விமான நிலையத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்ததோடு, நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில், சென்னை பழைய விமான நிலையத்தில், அமித்ஷா வருகையின் போது, செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும், திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டங்கள் கடந்த 4 தினங்களாக, தீவிரமடைந்து, போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதோடு, டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள், தற்காலிகமாக மூடப்பட்டு, டெல்லி முழுவதும் பதட்ட நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை சென்னை விமான நிலையத்தில் நடக்க இருந்த, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டமும், ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Delhi ,Amit Shah ,Tamil Nadu ,Puducherry ,Chennai ,NEET ,Home Minister ,Union ,
× RELATED ஆளுநர் மாளிகையில் இருந்து கண்டிப்பான...