×

தர்கா பகுதியில் ஓசூர் சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

*அகற்ற வலியுறுத்தல்

ஓசூர் : தர்கா பகுதியில் உள்ள ஓசூர் சந்திராம்பிகை ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூய்மைபடுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையொட்டி தர்கா பகுதியில், சந்திராம்பிகை ஏரி உள்ளது. இந்த ஏரியை அழகுப்படுத்தி படகு சவாரி செய்ய, கடந்த 2011ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்தது.

ஆனால், எந்த பணியும் நடைபெறாமல், இத்திட்டம் கைவிடப்பட்டதால், ஏரியை சுற்றிலும் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. மேலும், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலந்து, தற்போது ஆகாயத்தாமரை செடிகள் ஏரி முழுவதும் ஆக்கிரமித்து தண்ணீர் மாசடைந்து உள்ளது. இந்த ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், `சந்திராம்பிகை ஏரி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டது. கழிவு நீர் கலப்பது, இறைச்சி கழிவுகள் மற்றும் சாலைகளில் அடிபட்டு இறக்கும் நாய், பூனை போன்ற உயிரினங்களை ஏரியில் வீசி செல்வதாலும் ஏரி மாசடைந்துள்ளது.

மேலும், தற்போது ஆகாயத்தாமரைகள் அதிகளவு படர்ந்துள்ளது. எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைத்து, ஏரியில் பூங்கா அமைத்தும், படகு சவாரிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Akayathamar ,Osur Chandrambikai Lake ,Targa ,Ozur ,Osur-Bengaluru National Highway ,Chandrambikai Lake ,
× RELATED இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர்...