*அச்சத்துடன் வந்து செல்லும் பொதுமக்கள்
தஞ்சாவூர் : தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் கரந்தை மற்றும் மகர்நோம்புச்சாவடி சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. சொத்துக்கள் வாங்க, விற்க அவற்றை பதிவு செய்ய தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
பத்திரங்கள் பதிவு செய்வதற்கு டோக்கன் பெற்று, அவற்றை சரிபார்த்து பதிவு செய்வதற்கு பல மணி நேரங்கள் ஆகிறது.அதுவரை சொத்து வாங்குவோர், விற்போர், பதிவு திருமணம் செய்வோர், உயில் பதிவு செய்வோர், மற்றும் சாட்சிகள் அமருவதற்கு மூன்று கடப்பா கற்களை கொண்ட, தகரசீட் கொட்டகை மட்டும் உள்ளது. போதிய இருக்கை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு வருபவர்கள் பெரும்பாலானோர் நிற்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது.
இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது ஓய்வு பெற்றோர், உடல்நலம் குன்றியோர், முதியோர்கள் ஆவர் தகரசீட் அமருமிடத்திலும் ஒரு காற்றாடி வசதி கூட இல்லை. கடும் வெயில் காலம் என்பதால் இங்கு வரும் பொதுமக்கள் புழுக்கத்தில் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தவிர இந்த பத்திர பதிவு அலுவலகத்தில் இரண்டு கழிவறை வசதி உள்ளது. அந்த இரண்டு கழிப்பறைகளையும் அலுவலர்கள் உபயோகித்த நேரம் போக மற்ற நேரங்களில் யாரும் பயன்படுத்த இயலாதபடி பூட்டு போட்டு பூட்டி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: சார் பதிவாளர் அலுவலகங்கள் தஞ்சை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் போதிய அடிப்படை வசதி இன்றி உள்ளது. குடிநீர் வசதி இல்லை. தினமும் பத்திரப்பதிவுக்காக ஏராளமானோர் வருகின்றனர் குறிப்பாக உடல் நலம் குன்றி வருவோர் முதியோர் அமர்வதற்கு ஊதிய இருக்கை அமைக்கப்படவில்லை. ஆண்கள், பெண்கள் கழிவறை பூட்டப்பட்டுள்ளது.
அவசரத்திற்கு சிறுநீர் கழிக்க கழிவறை அருகே திறந்த வெளியை பயன் படுத்துவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், அந்த பகுதி முழுவதும் செடி, கொடிகள் புதர் போல் மண்டியுள்ளதன் காரணமாக விஷ ஜந்துக்கள் நடமாட்டம் தாராளமாக காணப்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகம் வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு நாகப்பாம்பு ஒன்று அங்குள்ள வராண்டாவில் உலா வந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
இதனால் பத்திரப்பதிவுக்கு பொதுமக்கள் அச்சத்துடன் வரவேண்டிய நிலை உள்ளது.எனவே துறை சார்ந்த அதிகாரிகள் புதர் போல் மண்டியுள்ள செடி, கொடிகளை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அமருவதற்கு கூடுதலாக, தரமான இருக்கைகள், காற்றாடி வசதியுடன் அமைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிவறைகளை திறந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
