×

மது விற்பனை மற்றும் பாலியல் தொழில்கள் என சமூக விரோதிகளின் கூடாரமானகோயம்பேடு பேருந்து நிலையம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 

சென்னை: இரவு நேரங்களில் மது விற்பனை மற்றும் பாலியல் தொழில்கள் என கோயம்பேடு பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை மாநகரில் பாரிஸ் கார்னரில் இயங்கி வந்த பேருந்து நிலையம் மற்றும் மொத்த காய்கறி வியாபாரத்தின் கேந்திரமாய் திகழ்ந்த கொத்தவால்சாவடி ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடியைப் போக்கவும், கோயம்பேட்டில் ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், சராசரியாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பலனடையும் வகையில் சுமார் 35 ஏக்கரில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் ஆசியாவிலேயே மிக பிரமாண்டமான பேருந்து நிலையம் 2002ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய விரைவு பேருந்துகள், சென்னை மாநகருக்குள் வராமல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதாலும், அங்கிருந்து சென்னை மாநகருக்குள் போதுமான அளவு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், பொதுமக்கள் பெரிதும் பலன் அடைந்தனர். மேலும், 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் குறைந்தது. அதேபோல், ஆம்னி பேருந்துகளை இயக்கவும் கோயம்பேட்டில் தனியாக இடவசதி செய்து தரப்பட்டது. இந்நிலையில், கோயம்பேட்டிலும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் அதிகமானதை தொடர்ந்து பேருந்து பயணிகளுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்தி தர, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் பிரமாண்டமான புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, வெளியூர் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கோயம்பேடு பேருந்து வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் மது அருந்துதல் மற்றும் தவறான பாலியல் தொழில்களில் ஈடுபடும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. சாலைகள் மோசமானதாகவும், உரிய மின் விளக்குகள் வசதியில்லாமல் கோயம்பேடு பேருந்து வளாகத்தின் உட்புறம் காணப்படுகிறது. தற்போது புதிய அரசு அமைந்த பின்னரும், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

தற்போதைய தவெக ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை, வெளி மாநில கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அப்படி ஒரு திட்டம் இருந்தால் உடனடியாக அம்முயற்சியை கைவிட வேண்டும் என்று தவெக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.கோயம்பேடு பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் புனரமைத்து, மேற்கு மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளையும், நகர பேருந்துகளையும் இயக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Koyambedu ,Edappadi Palaniswami ,Chennai ,AIADMK ,General Secretary ,
× RELATED நாளை மீண்டும் ‘ஜனநாயகன்’ படம் பார்க்கிறார் முதல்வர் விஜய்