×

வேலக்கவுண்டன்பட்டியில் 3 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

 

மல்லசமுத்திரம், ஜூலை 24: நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அடுத்த தொண்டிப்பட்டி கிராமம் பள்ளிக்கூடம்மேடு பகுதியில், தனியார் காம்ப்ளக்சில் மளிகை கடை, ஜோதிடர் கடை, கோழி மருந்து கடைகள் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த 3 கடைகளின் உரிமையாளர்களும், கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 3 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வேலகவுண்டம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜோதிடர் கடையில் இருந்த ரூ.5 ஆயிரம் ரூபாயை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும், அருகேயுள்ள மளிகை மற்றும் கோழி மருந்து விற்பனை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், அங்கு பணம் எதுவும் இல்லாததால் திரும்பி சென்றிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளனாரா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Velakavundapatti ,Mallasamuthiram ,Pallikoodammedu ,Thondipatti village ,Namakkal district ,
× RELATED மல்லசமுத்திரத்தில் 1867 மூட்டை பருத்தி ரூ.63.11 லட்சத்திற்கு ஏலம்