மதுரை, ஜூலை 24: மதுரை ஒத்தக்கடை, சீதாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா(45). புரோட்டா மாஸ்டரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மனைவி சரண்யாவுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்திவிட்டு மனைவியை தாக்கியுள்ளார். அவர் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இதையடுத்து, அங்கு சென்ற ராஜா, தகராறில் ஈடுபட்டு மாமியாரையும் தாக்கியுள்ளார். இதனால், மது அருந்துவதை நிறுத்தினால் மட்டுமே வீட்டிற்கு திரும்புவேன் என மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜூலை 22ம் தேதி அதிகாலை வீட்டில் ராஜா மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து ராஜாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
