மின் நிலையங்களை தகர்த்தால் “பிராந்தியம் முழுவதும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்”- டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

 

 

டெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் முக்கிய நிலைகள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை, டிரோன் அல்லது ஏதேனும் ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ஈரானில் உள்ள ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவால் தகர்க்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்த தாக்குதல் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தனது எக்ஸ் பக்கத்தில், “எங்களது தற்காப்பு கொள்கை மிகவும் தெளிவானது.

ஈரானிய உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும்” என பதிவிட்டுள்ளார். ஈரானின் -அரசு செய்தி நிறுவனமான ‘தஸ்னிமிடம் ராணுவ அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா ஈரானின் பாலங்களையோ அல்லது மின் நிலையங்களையோ தாக்கினால், அமெரிக்காவிற்கு சாதகமான நலன்கள் மற்றும் கூட்டு படைகள் உள்ள பிராந்தியம் முழுவதும் உள்ள பாலங்கள், எரிசக்தி நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தும். கடந்த 10 நாட்களில் நடந்த நிகழ்வுகளுக்கு பிறகு, ஈரான் தான் தாக்குதல் நடத்த முடிவெடுக்கும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்தும் என்பதில் அமெரிக்கர்கள் இப்போது முழுமையாக தெளிவு பெற்றிருக்க வேண்டும்.

எனவே, டிரம்ப் மேற்கொள்ளும் இத்தகைய எந்தவொரு துணிச்சலான நடவடிக்கையும் மீண்டும் அவருக்கு அவமானத்தையே தேடித்தரும். ஈரான் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது இறையாண்மையை நிலைநாட்டும், அந்த நீரிணையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை கைவிடாது’ என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதற்கிடையில், மேற்கு ஈரானில் உள்ள அஹ்வாஸ், ராம்ஷீர் மற்றும் அண்டிமேஷ்க் அருகே அமெரிக்க ஏவுகணை தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் 3 பேர் உயிர் இழந்ததாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்ற 3 எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தியதாக ஈரானின் புரட்சிகர படை கூறியுள்ளது. அவற்றில் ஒரு கப்பல் வெடித்து தீப்பிடித்ததாகவும், மற்ற 2 கப்பல்களும் திரும்பி சென்றுவிட்டதாகவும் அப்படை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் 94 டாலராக உயர்வு
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்க ராணுவம், ஈரானிய ராணுவ நிலைகள், டிரோன் சேமிப்பு கிடங்குகள் மற்றும் கட்டளை மையங்களை இலக்காக வைத்து தொடர்ந்து 12 நாட்களாக வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 94 டாலராக உயர்ந்து உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: