×

புழல் கதிர்வேடு பகுதியில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ள மழைநீர் கால்வாய்: அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

புழல்: புழல் கதிர்வேடு பகுதியில் மழைநீர் கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அம்பத்தூர் அருகே கொரட்டூர் ஏரியில் இருந்து உபரிநீர் கால்வாய் மாதனாங்குப்பம், புத்தகரம், பத்மாவதி நகர், கதிர்வேடு, செங்குன்றம் – செம்பியம் மாநில நெடுஞ்சாலை வழியாக புழல் அடுத்த ரெட்டேரி வரை செல்கிறது. இந்த, கால்வாய்களின் பல இடங்களில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து காணப்படுவதால், தண்ணீர் முறையாக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளது.

எதிர் வருகிற பருவமழை காலம் என்பதால், கொரட்டூர் ஏரி முழு கொள்ளளவு நிரம்பி, தண்ணீர் வெளியேற்றும் போது கால்வாய் வழியாக வெளியே செல்லாமல், ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, புழல் அடுத்த கதிர்வேடு சர்வீஸ் சாலை, செங்குன்றம் – செம்பியம் மாநில நெடுஞ்சாலை கரை பாலம் அருகே கால்வாயில் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்துள்ளன.இதேநிலை நீடித்தால் பருவமழை காலங்களில் மழைநீர் வெளியேறி, அருகில் உள்ள பல்வேறு நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடும் நிலை உருவாகும். இதனால், பகுதி மக்கள் மழைக்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை காணப்படும்.

எனவே, சம்பந்தப்பட்ட செங்குன்றம் நீர்வளத்துறை அதிகாரிகள், இதுகுறித்து ஆய்வு செய்து கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, மழைநீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Akayathamar ,Maghal Kadirvedu ,CATERPILLAR ,RAINWATER CANAL ,RADIVEDU AREA ,Koratur Lake ,Ambattur ,Matanangupam ,Puttagaram ,Padmavati Nagar ,Kathirvedu ,
× RELATED பட்டுகோட்டையில் காலாவதியான 120 பீர் பாட்டில்கள் அழிப்பு