×

காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி நாகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விவசாயிகள் போராட்டம்

வேதாரண்யம், ஜூலை 23: காவிரி டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி நாகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக கடைமடை விவசாய சங்க தலைவர் கமல்ராம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வேதாரண்யத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முற்றிலும் இழந்துள்ளோம். எல்நினோ தாக்குதலால் கேரளா, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் ஒட்டுமொத்தமாக மிகப்பெரும் வறட்சி தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை 75 அடிக்கு குறைவாக உள்ளது. இதனால் பாசனத்திற்கு அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 12 லட்சம் ஏக்கர் பாலைவனமாக காட்சியளிக்கிறது. நீர்நிலைகள் வரண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தும் பெரும் பாதிப்புக்கு காவிரி டெல்டா மாவட்டம் ஆளாகியுள்ளது. சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் எல்நினோ தாக்குதலால் மிகப்பெரும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில் விவசாய தொழிலாளர்களும் அண்டை மாநிலத்திற்கு வேலை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி இழந்து சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்விக்குரியான நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மேகதாது அணைக்கு எதிராக திமுக பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளது. இதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Naga ,Kaviri Delta ,Vedaranyam ,Nagai ,Khaviri Delta ,Kamalram ,president ,Tamil Nadu Agricultural Association ,
× RELATED கொள்முதல் நிலையங்கள்...