×

கிருஷ்ணராயபுரம் அருகே ஆசிரியர் தகுதிதேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரம், ஜுலை. 23: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முன்பு அகில இந்திய ஆசிரியர் கூட்டணி செயல் திட்டத்தின்படி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை முற்றிலும் ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்டாரத் தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார செயலாளர் ராஜா வரவேற்றார். இதில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்களை வருகின்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தகுதி தேர்வு கூடாது என சட்ட திருத்தம் கோரும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தற்போதைய நிலையில் ஆசிரியர்களின் பணி அனுபவங்களையும் கணக்கில் கொண்டு பணிக்காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக வட்டார பொருளாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Tags : Krishnarayapuram ,Mayanur ,Tamil Nadu Primary School Teachers’ Federation ,All India Teachers’ Federation ,ATF ,District Teachers’ Education and Training Institute ,
× RELATED லாலாப்பேட்டை அருகே சட்டவிரோதமாக மதுவிற்ற 2 பேர் கைது