ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விலை அதிகரித்திருப்பதால் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால், ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. ஈரோடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு மஞ்சள் விலை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மஞ்சள் விலை கடந்த மாதம் குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் ரூ.4,500 வரை உயர்ந்துள்ளது. இருப்பு குறைவு, உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக மஞ்சள் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சள் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
