தமிழகத்திலும் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்; மறியலில் ஈடுபட்ட மாணவிகள் குண்டுக்கட்டாக இழுத்து சென்று கைது: கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்களை பிடித்ததால் பரபரப்பு

சென்னை: நீட் தேர்வு ரத்து கோரி டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்துள்ளனர். எழும்பூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக இழுத்து சென்று கைது செய்தனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

நாடாளுமன்றம் நோக்கி நேற்று முன்தினம் மாணவர்கள் பேரணியாக செல்ல முயன்ற போது, போலீசார் தடுத்து, தடியடி நடத்தினர். இதனால் டெல்லி முழுவதும் கலவரமாக மாறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதை கண்டித்தும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொது இடத்தில் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும், நேற்று முன்தினம் இரவு எழும்பூரில் மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்த முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 81 பேரை கைது செய்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 8 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ், எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே டெல்லியில் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இந்திய மாணவர் சங்கம் மற்றும் டிஒய்எப்ஐ, தமிழ்நாடு இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடத்த அனுமதி கோரினர்.

ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மாணவர் அமைப்புகள் போலீசாரின் தடையை மீறி போராட்டம் நடத்த எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஒன்று கூடினர். இதனால் போலீசார் மாணவர்களின் போராட்டத்தை தடுக்கும் வகையில் அப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். இதனால், மாணவர் அமைப்புகள் ராஜரத்தினம் மைதானம் அருகே உள்ள இணைப்பு சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

ஆனால் மாணவர்கள் நீட் தேர்வு ரத்து, மாணவர்கள் மீது நடத்திய தடியடியை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்காத போலீசாரின் அடக்குமுறைகளை கண்டித்து சாலையில் படுத்தப்படி மோடி அரசுக்கும், போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை குண்டுக்கட்டாக தரதரவென இழுத்து சென்று கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.  அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவிகள் என்றும் பாராமல் பெண் போலீசார் மாணவிகளின் ஆடைகளை கிழித்து, வலுக்கட்டாயமாக பேருந்தில் ஏற்றினர். இதில் சில மாணவிகளுக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை பல்கலைக்கழக வளாகத்திலும், மாநில கல்லூரி வளாகத்திலும், ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி வளாகத்திலும் ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

வடசென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க வட சென்னை மாவட்ட தலைவர் மோகன் கிருஷ்ணன் தலைமையில் கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டம் நடந்தது. திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்த கூடாது என்று கல்லூரி வளாகத்திற்குள் அமைதியான முறையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளான 4 மாணவர்களை சட்டையை பிடித்து தரதரவென இழுத்து வந்து காரில் ஏற்றினர்.

அப்போது மாணவிகள் இன்ஸ்பெக்டர் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். அப்போது அமைதியாக செல்லவில்லை என்றால் உங்களையும் கைது செய்வோம் என்று மிரட்டினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அனைத்து கல்லூரிகளில் போராட்டத்தை வழிநடத்திய இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளை அடையாளம் கண்டு அவர்களை கல்லூரிக்குள் புகுந்து போலீசார் கைது செய்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது.

* காவல் நிலையம் முற்றுகை
சென்னை திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது 4 மாணவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கைது செய்த 4 மாணவர்களை விடுவிக்க வேண்டும் மற்றும் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் செல்ல மாட்டோம் என்று கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

* சீருடையுடன் வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை கைது செய்த போலீசார்
மதுரை தமுக்கம் தமிழன்னை சிலை அருகே நேற்று முன்தினம் இரவு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறை வாகனங்களில் ஏற்றினர். அப்போது இந்திய மாணவர் சங்கத்தினர் சிலர் வேகமாக ஓடி புதிதாக கட்டப்பட்ட மேம்பால சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை தடியடி நடத்தி கலைத்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்டத் தலைவர் டீலர் ஜஸ்டின், மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜதுரை மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி ரவி ஆகியோரை சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள் போலீஸ் சீருடையில் சென்று கைது செய்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து தூக்கிச் சென்றனர்.

* மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதால் மாணவர்கள் கைது: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
சென்னையில் அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: சாலைகள் போராடுவதற்கான இடமல்ல. ஜனநாயக முறைப்படி அனுமதி பெற்று போராட்டம் நடத்தினால் ஆதரிக்கிறோம். நீட் தேர்வுக்கு எதிராக உரிய அனுமதி பெற்று மாணவர்கள் அறவழியில் போராடினால் பிரச்னை இல்லை. திடீரென தூண்டுதல் காரணமாக போராட்டம் நடத்தினால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

சாதாரண மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக போராட்டம் நடத்தப்பட்டதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. டெல்லியில் ஜனநாயக முறைப்படி போராடும் இடத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதான் டெல்லி காவல் துறைக்கும், தமிழக காவல்துறைக்கும் உள்ள வித்தியாசமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

* கல்லூரிகள் முன் போலீஸ் குவிப்பு
நீட் தேர்வு ரத்து கோரி நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது அமைதிக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி பச்சையப்பன் கல்லூரி,

மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதுக்கல்லூரி என அனைத்து கல்லூரிகள் முன்பும் உதவி கமிஷனர் ஒருவர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் ராஜரத்தினம் மைதானம் மற்றும் ஆளுநர் மாளிகை அருகே எந்த நேரத்திலும் போராட்டம் நடக்கும் என்பதால், அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

* போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா
டெல்லி பேராட்டத்திற்கு ஆதரவாக அனைவரும் மெரினாவில் ஒன்று கூடுவோம் என்று சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மத்தியில் தகவல் வைரலாக பரவி வருகிறது. இதனால் அண்ணாசதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள மெரினா கடற்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை, உழைப்பாளர் சிலை பகுதிகளில் கூடுதல் போலீஸ் போடப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களை போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர். காமராஜர் சாலையில் இருந்து மெரினா பகுதிக்கு செல்லும் அனைத்து சர்வீஸ் சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: