மண்டபம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள், மஞ்சள், கடல் அட்டைகள், அழகுசாதன பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம், வேதாளை கடற்கரை பகுதிகளில் கடலோர குழுமம் காவல் நிலைய ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் போலீசார் நேற்றுமாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் பிளாஸ்டிக் கூடையுடன் வந்த இருவரை வழிமறித்தனர்.

இருவரும் போலீசாரை பார்த்ததும் பைக் மற்றும் பிளாஸ்டிக் கூடையை போட்டுவிட்டு தப்பியோடினர். கூடையை சோதனை செய்ததில் இரண்டு சாக்கு பைகளில் கடல் அட்டைகள் இருந்தது. கடல் அட்டைகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். கடல் அட்டையை மதிப்பீடு செய்ததில், அவை சுமார் 100 கிலோ எடையுள்ள பச்சை அட்டைகள் என்பதும் இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் எனவும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: