×

கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரூ.30 கோடி அரசு நிலம் மீட்பு: வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய் துறை அதிகாரிகள் அதிரயடியாக மீட்டனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் சர்வே எண்:113ல் 6.48 ஏக்கர் நிலம் அரசு ‘அ’ பதிவேட்டில் அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரி என பதிவாகி இருந்தது. தற்போதைய கணினி பட்டாவில் எண்:4235ன்படி பவுல்ராஜ், சேவியர் ஆகியோர் பெயரில் புன்செய் நிலம் என பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்த நிலத்தை சுற்றி வேலி அமைத்து விவசாயம் செய்து வந்தனர்.

இதுகுறித்து, அதே பிஞ்சிவாக்கம் கிராமத்தை சேர்ந்த லீமா (40) என்பவர், அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரியை பவுல்ராஜ், சேவியர் ஆகியோர் ஆக்கிரமித்து, தங்களது பெயரில் கணினி பட்டாவில் எண்:4235ன் படி புன்செய் நிலம் என பதிவு செய்து மாற்றிக்கொண்டு, அந்த நிலத்தை சுற்றி வேலி அமைத்து விவசாயம் செய்து வருவதாக கடந்த 2025ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.

மாவட்ட கலெக்டர் கவிதா உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் செயல்முறை ஆணையின்படி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நேற்று பிஞ்சிவாக்கம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு, அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரியை பவுல்ராஜ், சேவியர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துக்கொண்டு, தங்களது பெயரில் கணினி பட்டாவில் புன்செய் நிலம் என பதிவு செய்து மாற்றிக்கொண்டு, அந்த நிலத்தை சுற்றிலும் வேலி அமைத்து, விவசாயம் செய்து வந்த சர்வே எண்:113ல் 6.48 ஏக்கர் நிலத்தை அதிரடியாக மீட்டெடுத்தார்.

தொடர்ந்து புன்செய் நிலம் என மாற்றி இருந்த கணினி பட்டாவை ரத்து செய்து, அரசு கணக்கில் கொண்டு வந்து பதிவேற்றம் செய்தார். மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு வெள்ளாளன் ஏரியின் 6.48 ஏக்கர் மதிப்பு ரூ.30 கோடி என வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, வட்டாட்சியர் சரண்யா, மண்டல துணை வட்டாட்சியர் கவிதா, வருவாய் ஆய்வாளர் பிராங்களின் பீனா, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன், வருவாயத் துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Kadampathur Union Finchivakkam Village ,Revenue Department ,Thiruvallur ,Kadambathur Union ,Pinchivakkam Village ,Government ,
× RELATED விளாத்திகுளம் அருகே அங்கன்வாடியில்...