தொலைதூர கல்வி சேர்க்கை அங்கீகரிக்கப்படாத மையங்கள் வழியாக சேர வேண்டாம்: சென்னை பல்கலை வேண்டுகோள்

சென்னை: தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கையில் அங்கீகரிக்கப்படாத மையங்கள் மூலமாக சேர வேண்டாம் என சென்னை பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் நேற்று வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகம் சார்பில் செயல்படுவதாகவோ அல்லது அதை பிரதிநிதிப்படுத்துவதாகவோ கூறிக்கொள்ளும் அங்கீகரிக்கப்படாத தனிநபர்கள், முகமைகள், நிறுவனங்கள் அல்லது சேர்க்கை மையங்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

இந்த விஷயத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்படாத சேர்க்கை மையங்களுடன் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோளிங்கர் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் ஆஸ்கார் ஆன்லைன் அட்மிஷன் சென்டர் என்ற நிறுவனம் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை மையம் அல்ல.

எனவே, சென்னை பல்கலைக்கழக நேரடி மாணவர் சேர்க்கை மற்றும் இணையவழி மாணவர் சேர்க்கை தொடர்பாக பொதுமக்கள் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். அதை மீறி தொலைதூரக் கல்வி சேர்க்கை, தேர்வுகள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் செய்து இழப்பை சந்தித்தால் அதற்கு பல்கலைக்கழகம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: