சென்னை: தவெக ஆட்சி அமைந்தது முதலே பொதுப்பணித்துறையில் வெளியிடப்படும் டெண்டர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக மே மாதம் வெளியிடப்பட்ட டெண்டர் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணிக்கு முடிந்து, 4 மணிக்கு முடிவுகள் சொல்லப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது கடும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நீர்வளத்துறையின் சார்பில் கடந்த ஜூலை 15ம் தேதி சுமார் 28 டெண்டர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறிப்பாக அந்த டெண்டர் குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் வகையில் லிமிடெட் டெண்டர் என்ற வகையில் வெளியிடப்பட்டது. மேலும், சான்றிதழ் வாங்க ஒப்பந்ததாரரை நேரில் வரச் சொல்லியும் உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு வந்ததும் அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பெறுவதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்தச் சூழலில் கடும் எதிர்வினைக்கு பிறகு நீர்வளத்துறை சார்பில் அந்த 28 டெண்டர்களையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
