×

பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வழக்கில் முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரம்பூர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கில் தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு புதிதாக நோட்டீஸ் அனுப்புமாறு திமுக வேட்பாளர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்வர் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்கு பெற்றிருந்தார்.

பெரம்பூர் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் தொகுதி வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தாக்கல் செய்திருந்த மனுவில், வேட்பு மனுவில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை விஜய் வழங்கி உள்ளார். சொத்துகள் விவரங்கள் மற்றும் வழக்குகள் விவரங்கள் முறையாக தெரிவிக்கவில்லை. எனவே, விஜய்யின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என்று ஆர்.டி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் விஜய், தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags : Chief Minister ,Vijay ,Dimuka ,Perampur ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu ,Chennai Perampur ,Dweka ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...