×

லண்டன் பயணத்தை முடித்து கொண்டு 16 நாட்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை: திமுகவின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை

சென்னை: லண்டன் பயணத்தை முடித்து கொண்டு 16 நாட்களுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு அவர் திமுகவின் மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு தொடர்பான பட்டப்படிப்பை படித்து முடித்தார்.

இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் கடந்த 4ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர், 2 வாரங்கள் லண்டனில் தங்கி இருப்பேன் என்று திமுகவினருக்கு எழுதிய கடித வடிவிலான அறிக்கையில் தெரிவித்தார். லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின் கடந்த 14ம் தேதி அன்று பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

பட்டம் பெற்ற பேரன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்தினார். இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் 2 வார கால லண்டன் பயணத்தை முடித்துகொண்டு கடந்த 19ம் தேதி இரவு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டன் பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 16 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் வருகை தந்தார்.

அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவரை ‘தங்க தளபதி’ என முழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். சென்னை அண்ணா அறிவாலயம் வந்த மு.க.ஸ்டாலின் திமுகவின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் மறுசீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Tags : MK Stalin ,Anna Arivalayam ,London ,DMK ,Chennai ,Udhayanidhi Stalin ,Inpanidhi ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...